பொதுமக்களுக்கு பொங்கல் பொருள்களை உடனடியாக வழங்க புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.கே.மக்கள் நலச் சங்க அமைப்பாளர் குமார் வலியுறுத்தினார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட ஐந்து வகையான பொங்கல் பொருள்களை வழங்குவதாக அறிவித்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்தும், இதுவரை காலாப்பட்டு பகுதியில் எந்த நியாயவிலைக் கடையிலும் பொங்கல் பொருள்கள் வழங்கப்படவில்லை. சில நியாயவிலைக் கடைகளில் பச்சரிசி, வெல்லம் மட்டும் வந்துள்ளன. இதனால், அனைத்துப் பொருள்களும் வந்த பின்னரே தருவதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் கூறி வருகின்றனர். இனிவரும் காலங்களில் காலத்தோடு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.