நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: என்.ரங்கசாமி
பிறர் மீது குறை சொல்வதை காங்கிரஸ் அரசு நிறுத்திவிட்டு நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி வலியுறுத்தினார்.
பிறர் மீது குறை சொல்வதை காங்கிரஸ் அரசு நிறுத்திவிட்டு நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி வலியுறுத்தினார்.
புதுவை சட்டப்பேரவையில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பேரவை வளாகத்தில் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டுதான் வரவேண்டிய ஒரு நிலை உள்ளது. சட்டப்பேரவை இந்நிலையில் இருந்தால் பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும். தினமும் கொலை, கொள்ளை என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகூட
ரூ.1 கோடி அளவுக்கு நகை, பணம் திருடு போய் உள்ளது. ஏழை மக்களுக்கு வழங்கக் கூடிய இலவச அரிசியையே இவர்களால் வழங்க முடியவில்லை.
முதியோர், ஊனமுற்றோர் உதவித்தொகை சரியாக கொடுக்கவில்லை. முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கவில்லை. சென்டாக் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை, நோயாளிகளுக்கு உணவு இல்லை. தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை. உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெறவில்லை.
எதற்கெடுத்தாலும் நிதியில்லை, ஆளுநர் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவதைத்தான் தினமும் பார்த்துக் கொண்டிக்கிறோம். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த என்ன வழி என்று அரசு கவனித்து செயல்படுத்த வேண்டும்.
20 மாதமாக பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பாசிக் நிறுவனத்திடம் இருந்த மதுபானக்கடை உரிமத்தை ரத்து செய்துள்ளனர். இதை யாருக்காக? எதுக்காக செய்தார்கள்?. கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. காரைக்கால் பஞ்சாலையும் இயங்கவில்லை. இதனால் தான் என்ஆர் காங்கிரஸ் சட்டப்பேவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது என்றார் ரங்கசாமி.