காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!
காஸாவில் கர்ப்பிணி, குழந்தைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 12 பேர் பலி!
காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் வான் வழி தாக்குதல்களில் கர்ப்பிணியொருவர், அவரது மகன் உள்பட மொத்த 12 பேர் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 15) கொல்லப்பட்டனர்.
இன்று காலை மத்திய காஸாவில் நுசெய்ராட் பகுதியிலுள்ளதொரு நிவாரண முகாம் மீது இஸ்ரேல் விமானப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், 4 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நிவாரண முகாமில் இருந்த 30 வயது பருவ இளம் தம்பதியரும் அவர்களது 10 வயது மகனும் இந்தத் தாக்குதலில் மாண்டனர். உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்குள்படுத்தியதில், அவர் கர்ப்பமாகவிருந்ததும் அவரது கருவில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்ததையும் அல்-அப்சா மார்டைர்ஸ் மருத்துவமனை நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. அப்பகுதியிலிருந்து 15 வயது சிறுவனொருவரும் இந்தத் தாக்குதலில் பலியானார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
அதன் தொடர்ச்சியாக, பகல் வேளையில் ஸவைடா மத்திய நகரில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் 8 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
மேற்கண்ட தாக்குதல்களில் 14 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.