இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் கொல்லப்பட்டது குறித்து...
லெபனானில் இஸ்ரேலியப்படைகளின் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
Advertisement
ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நடைபெற்று வந்த போர் 2 வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக கடந்த ஏப். 7 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இருப்பினும் இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என்று கூறி லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இதையடுத்து கடந்த மார்ச் 2 முதல் இதுவரை லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 6,303 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏப்ரல் 7 ஆம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு ஏப். 8 மட்டும் நடந்த தாக்குதல்களில் 357 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ஈரானின் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனக் கூறியுள்ள நிலையில், ஈரான் மற்றும் மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான், இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஏப். 14 ஆம் தேதி இஸ்ரேல், லெபனான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.