லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 2,190-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறித்து...
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,196 ஆக அதிகரித்துள்ளது.
ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக, மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதையடுத்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவம் மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த மார்ச் 2 முதல் வியாழக்கிழமை (ஏப். 16) வரை 2,196 பேர் கொல்லப்பட்டதாக, லெபனானின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 260 பெண்கள் மற்றும் 172 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 7,185 பேர் படுகாயமடைந்தது தெரியவந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.
மேலும், கடந்த 1993 ஆம் ஆண்டுக்குப் பின் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே முதல்முறை நேரடியாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.