தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுவை மாநில காவல்துறை அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுவை மாநில காவல்துறை அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு புதுச்சேரி நேரு வீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் புதுவை மட்டுமன்றி கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் சிறுசேமிப்பாக பணம் செலுத்தி வந்துள்ளனர். கோடிக்கணக்கில் பணம் வசூலான சிறுசேமிப்பு பணம் முதிர்வடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகம், மக்களிடம் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் பணத்தை மீட்டுத் தரக் கோரி மாநில தலைமை காவல் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அவர்களை பெரியகடை போலீஸார் தடுத்து நிறுத்திய நிலையில், காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.