கடல் வளத்தை பயன்படுத்தினால் நாடு பொருளாதார வளர்ச்சிபெறும்: பல்கலை. துணைவேந்தர்
கடல் வளத்தை பயன்படுத்தினால், இந்தியா பொருளாதாரத்தில் மிகச்சிறந்த நிலையை அடைய முடியும் என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத் துணை வேந்தர் குர்மீத் சிங் வலியுறுத்தினார்.
கடல் வளத்தை பயன்படுத்தினால், இந்தியா பொருளாதாரத்தில் மிகச்சிறந்த நிலையை அடைய முடியும் என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத் துணை வேந்தர் குர்மீத் சிங் வலியுறுத்தினார்.
புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில், கடல் வளங்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு என்ற தலைப்பிலான இரு நாள் தேசிய கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தலைமை வகித்து பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங் பேசியதாவது:
இந்தியாவிலுள்ள கடல் வளங்களை முழுமையாகப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடற்கரையோரங்களில் வசித்து வரும் பொதுமக்களும் கடல் வளப் பாதுகாப்பில் ஈடுபட்டால், கடல் சார்ந்த வளங்கள், அவற்றிலுள்ள உயிரினங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.
இந்த வளங்களைப் பயன்படுத்தினால், பொருளாதாரத்தில் இந்தியா மிகச் சிறந்த நிலையை அடைய முடியும். அதனால், கடலிலுள்ள வளங்கள், அதிலுள்ள பல்வேறு உயிர் ஆதாரங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கடல் ஆராய்ச்சியாளர்கள் மக்களிடையே விளக்கிச் சொல்ல வேண்டும் என்றார் அவர். இந்தியக் கடற்படை அட்மிரல் அலோக் பட்நாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேசியக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பேசும்போது, கடல் வழிகளைப் பயன்படுத்தி வாணிபத்தை பன்மடங்காக உயர்த்த முடியுமென்பதால், கடல் வள பாதுகாப்பில் அரசு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறது என்றார் அவர். தொடர்ந்து, ஹைதராபாத், உஸ்மானியா பல்கலைக்கழக, இந்தியக் கடல்ஆராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் பி. வி.ராவ் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில், பல்கலைக்கழக மானியக் குழு கடல் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் ராஜீ தொகுத்த இரு நுôல்கள் வெளியிடப்பட்டன.
கடல் வளம், அதிலுள்ள இயற்கை, உயிரின வளங்கள்,பன்னாட்டு வர்த்தகத்தில் கடற்கரைப் பகுதிகளின் பங்களிப்பு மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய பொருளாதார மேம்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் கடல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
ஆய்வு மாணவர் ஸ்டீபன் ஜோசப் நன்றி தெரிவித்தார்.
கருத்தரங்க ஏற்பாடுகளை பல்கலைக்கழக மானியக் குழு கடல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர்.