பார் கவுன்சில் தேர்தல்: புதுச்சேரியில் 774 வாக்குகள் பதிவு
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 774 வாக்குகள் பதிவாகின.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 774 வாக்குகள் பதிவாகின.
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான தேர்தல், கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் 2016-ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பார் கவுன்சிலை தாற்காலிகமாக நிர்வகிக்க சிறப்பு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான தேர்தல் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த பிப்.1-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 192 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ராமச்சந்திர மூர்த்தி, முனுசாமி ஆகிய இருவரும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், பார் கவுன்சில் தேர்தல் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர் சங்க அறையில் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி
பத்மநாபன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
புதுச்சேரியைச் சேர்ந்த வாக்களிக்கத் தகுதியான 848 வழக்குரைஞர்களில் 774 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிந்த பிறகு, வாக்குப் பெட்டி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 25 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவர். அதில் இருந்து பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.