மணிப்பூரில் திருவள்ளுவர் சிலை மார்ச் 31-இல் திறப்பு
மணிப்பூர் மாநிலம், மோரே நகரில் திருவள்ளுவர் சிலை வருகிற 31-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
மணிப்பூர் மாநிலம், மோரே நகரில் திருவள்ளுவர் சிலை வருகிற 31-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
மோரே நகரில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இந்த நகரில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வருகிற 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக 4 அடி உயரம், 3 அடி அகலத்துடன் 500 கிலோ எடையுள்ள ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருவள்ளுவர் சிலையை தமிழ்த் தாய் அறக்கட்டளையும், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்துவும் வழங்கியுள்ளனர். இந்தச் சிலை கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் வடிவமைக்கப்பட்டு ரயில் மூலம் மோரே நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற சனிக்கிழமை (மார்ச் 31) துரை.ராசமாணிக்கம் தலைமையில், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து திருவள்ளுவர் முழு உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் புதுவை, தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உடையார்கோயில் குணா செய்துள்ளார்.
இந்தத் தகவல் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.