காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு
புதுவை காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுவை காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுவையில் குற்றச் சம்பவங்கள் எது நடந்தாலும் பொதுமக்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறையான 100 மற்றும் காவல் தொடர்பான புகார் வாங்க மறுத்தல், லஞ்சம் பெறுதல் போன்ற ரகசிய புகார்களை ஆளுநர் உருவாக்கிய 1031 என்ற தொலைபேசியில் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தொலைபேசியில் அளிக்கப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக எழுந்துள்ளது. இது சம்பந்தமான புகாரின் பேரில், ஆளுநர் கிரண்பேடி திங்கள்கிழமை காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த முறை ஆய்வு செய்த போது புகார் சம்பந்தமாக கணினியில் பதிவு செய்ய கூறியிருந்தார். அவற்றை ஏன் இன்னும் செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பினார். இதுவரை வரப்பெற்ற புகார்கள் எத்தனை? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எனக் கேள்வி எழுப்பினார். அதன்பிறகு, 1031-க்கு வரும் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கண்காணிக்க வேண்டும் எனக் கூறினார். புகார் கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது, புதுவை காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெளதம், ஆளுநரின் தனி செயலர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.