தனியார் பள்ளிகளின் விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிமுக கோரிக்கை
தனியார் பள்ளிகளின் விதிமீறலை புதுவை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் வலியுறுத்தினார்.
தனியார் பள்ளிகளின் விதிமீறலை புதுவை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசின் தவறான கல்விக் கொள்கையால் பள்ளி மாணவர்களும், உயர் கல்வி பயிலும் மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கும்போது 50 சதவிகித இடத்தை அரசின் இடஒதுக்கீடாக வழங்கப்படும் என்ற உறுதிமொழி மெல்ல மெல்ல காற்றில் விடப்பட்டுள்ளது.
4 நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் ஓர் இடம் கூட எம்பிபிஎஸ் அல்லது முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசின் இடஒதுக்கீடாக பெற முடியாத சூழலை புதுவை அரசு திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. அதேபோல, புதுவை பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் 3 தனியார் மருத்துவக் கல்லுரிகளிலும் சென்டாக் இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் மொத்தமுள்ள 115 முதுநிலை படிப்புக்கான கிளினிக்கல், நான்கிளினிக்கல் இடம் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்த இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 15) அரசு சார்பில் இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்தக் கலந்தாய்வு நடத்தும்போது புதுவை மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்துவிட்டு அதன் பிறகு அகில இந்திய அளவில் தரவரிசை மதிப்பெண் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே 4 நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயில வாய்ப்பு இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இறுதிக்கட்ட கலந்தாய்வில் புதுவை மாணவர்களுககு முன்னுரிமை அளிக்க ஆளுநரும், முதல்வரும் மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
புதுவை மாநிலத்தில் சுயநிதி தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. அரசுக்கு சவால்விடும் வகையில் இந்த விளம்பரம் வந்துள்ளது. இது ஆரோக்கியமானது அல்ல. ஆட்சியாளர்களின் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த விளம்பரம் வந்துள்ளது. இதுபோன்ற தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றார் அன்பழகன்.