முகப்பு
புதுச்சேரி

வீதியில் தவித்த மூதாட்டிக்கு உணவூட்டிய காவலர்: ஆளுநர் பாராட்டு

வீதியில் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு உணவூட்டிய காவலரின் செயலை அறிந்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவரைப் பாராட்டினார்.

Updated On : 21 மே, 2018 at 8:28 AM
பகிர்:

வீதியில் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு உணவூட்டிய காவலரின் செயலை அறிந்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவரைப் பாராட்டினார்.
புதுவை மாநிலம், ஏனாம் காவல் நிலையத்தில் ரோந்துக் காவலராகப் பணியாற்றி வருபவர் கடலி மதுசூதன ராவ். இவர், ஏனாம் குடியிருப்புப் பகுதியில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்த போது, அவரது செல்லிடப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. 
செல்லிடப்பேசியில் பேசிய நபர், ஏனாம் காந்தி கடற்கரைச் சாலையில் 70 வயது மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி தவித்து வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு சென்ற காவலர் மதுசூதன ராவ், மூதாட்டி ஒருவர் வலது கையில் காயத்துடன் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.
அவரிடம் விசாரித்த போது, ஏனாம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததாகவும், திங்கள்கிழமை காலைதான் சிகிச்சை பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும், உணவுக்கு வழியின்றி மூதாட்டி தவித்ததை அறிந்த அவர், உடனடியாக உணவை வாங்கி வந்து, அவருக்கு ஊட்டிவிட்டார்.
காவலரின் மனிதநேயம் மிக்க இந்த செயலை அறிந்த ஆளுநர் கிரண் பேடி, காவலர் கடலி மதுசூதன ராவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.