சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சட்ட விரோத பணி நியமனம்
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சட்ட விரோதமாக பணி நியமனம் செய்யப்படுவதாக புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழக தினக்கூலி ஊழியர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியது.
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சட்ட விரோதமாக பணி நியமனம் செய்யப்படுவதாக புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழக தினக்கூலி ஊழியர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் 4 ஆண்டுகளாகப் பணிபுரிந்த 200 ஊழியர்கள் கடந்த 2016 -ஆம் ஆண்டில் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு, பொதுநல வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அண்மையில் 3 மாதம் முதல் 6 மாதம் வரை இலவசமாக, தன்னார்வமாக ஊதியமின்றி பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்தது.
இது கொல்லைப்புறமாக ஆள்களைப் பணி அமர்த்தும் செயலாகும். ஏற்கெனவே, பணி செய்த ஊழியர்களுக்கு 10 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாத நிலையில், தற்போது இலவசமாகப் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்ததை ஏற்க முடியாது.
கடந்த 2016- ஆம் ஆண்டில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், படகு சவாரியின் போது சுமார் 17 வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் விழுந்து இறந்துள்ளனர். நல்ல லாபம் ஈட்ட வேண்டிய படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த ஊழியர்களை தடாலடியாக நிறுத்திவிட்டு சட்டத்தையும், நீதிமன்றத்தையும் ஏமாற்ற சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுத்துள்ள பொது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே வேலையிழந்த தினக்கூலி பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக, துணைநிலை ஆளுநரும், முதல்வரும் பணியமர்த்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.