தேர்தலில் வலுக்கட்டாயமாக மோசடி செய்ய முயற்சிக்கும் பாஜக: மமதா குற்றச்சாட்டு
மேற்கு வங்க தேர்தலில் வலுக்கட்டாயமாக மோசடி செய்ய பாஜக முயல்வதாக மமதா குற்றச்சாட்டு
புது தில்லி: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட தேர்தலில், வலுக்கட்டாயமாக மோசடி செய்ய பாஜக முயற்சிப்பதாக மாநில முதல்வரும் திரிணமூல் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 142 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பவானிபூர் தொகுதி வேட்பாளரும், மாநில முதல்வருமான மமதா பானர்ஜி, வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, கொல்கத்தாவில், செய்தியாளர்களை சந்தித்த மமதா பானர்ஜி, வாக்குகள் வாக்காளர்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும், ஆனால், காவல்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பதிவு செய்யப்படக் கூடாது, பாஜக வலுக்கட்டாயமாக தேர்தலில் மோசடி செய்ய முயற்சிக்கிறது.
Advertisement
வேறு மாநிலத்தவர்களை தேர்தல் அதிகாரிகள் போல வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்று பாஜகவினர் மோசடி செய்கிறார்கள். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பாஜகவினர் என்று கூறுபவர்களுக்கு வங்க மொழியே தெரியவில்லை.
கவுன்சிலரின் வீட்டை மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் சூறையாடியிருக்கிறார்கள், திரிணமூல் தொண்டர்களை அடித்துத்தாக்கியிருக்கிறார்கள், இங்கு நிலைமை பயங்கரமாக இருக்கிறது, ரௌடி கும்பல்களைப் போல பாஜக செயல்படுகிறது என்றும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதேவேளையில், பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ஒரு வேட்பாளராக மமதா பானர்ஜி வாக்குச்சாவடிகளுக்குச் செல்லலாம், ஆனால், அதிகமானோரை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லக் கூடாது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.