பங்காரு வாய்க்காலை சீரமைக்க ஆளுநர் உத்தரவு
புதுவை மாநிலத்தில் உள்ள பங்காரு வாய்க்காலைச் சீரமைக்க வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவை மாநிலத்தில் உள்ள பங்காரு வாய்க்காலைச் சீரமைக்க வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
கடந்த 2 ஆண்டுகளாக புதுவை ஆளுநர் கிரண் பேடி வார இறுதி நாள்களில் புதுவை மாநிலப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி அருகே பாகூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாகூர் ஏரி மற்றும் புதுச்சேரியில் உள்ள 13 குளங்களுக்கும், தமிழகப் பகுதியில் உள்ள 8 குளங்களுக்கும் நீரை கொண்டு வரும் பங்காரு வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்தும், தூர்ந்தும் கிடந்தன. சில இடங்களில் வாய்க்கால் பகுதி ஆக்கிரமிப்பு செய்தும், அடைபட்டும் இருப்பதைக் கண்டார்.
இதையடுத்து, அதிகாரிகளிடம் உடனடியாக வாய்க்கல் அடைப்புகளை நீக்கி, மழைநீர் ஏரி, குளங்களுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர், அந்த வாய்க்காலுக்கு நீரை அனுப்பும் சொர்ணாவூர் அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்றார்.
அங்கு தமிழகப் பொதுப் பணித் துறை அதிகாரிகளும் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் புதுவை மற்றும் தமிழகத்தில் செல்லும் பங்காரு வாய்க்காலை தமிழக அரசுதான் பராமரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தைக் காண்பித்தனர்.
இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடி, புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரத்திடம் கேட்டறிந்தார். இதையடுத்து, அவர் புதுவை பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை இணைந்து குழு அமைத்து, பங்காரு வாய்க்காலில் எங்கெங்கு அடைப்பு உள்ளதோ அதை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர்களுடன் ஏரி சங்கமும் இணைந்து செயல்படும் என்றார் அவர்.
மேலும், இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என்றும், இந்தப் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பதை செப். 16-ஆம் தேதி மீண்டும் வந்து ஆய்வு செய்வேன் என்றும் அவர் கூறினார்.
பங்காரு வாய்க்காலைத் தூர்வாரி நீர் செல்ல வழி செய்வதன் மூலம் பாகூர் நெல் களஞ்சியமாக மாறும். மேலும், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் மேம்படும் என்று ஆளுநர் கூறினார.
இந்த ஆய்வின் போது, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செளத்ரி மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.