சர்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தையொட்டி, புதுவை சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சர்வதேச தற்கொலை தடுப்பு மாதம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மற்றும் தடுப்பு தினம் செப்.10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேசிய மனநல திட்டம், புதுவை சுகாதாரத் துறை சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை புதுவை அரசின் தேசிய மனநல திட்டத்தின் திட்ட அதிகாரி ஜவஹர் கென்னடி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியில் பல்வேறு செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி கடற்கரை காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது.