காவலர் தேர்வு வயது வரம்பை உயர்த்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
புதுவை மாநில பாஜகவின் செயற்குழுக் கூட்டம் காரைக்காலில் செப்.21-ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பெட்ரோலுக்கான வரியை பல மாநில அரசுகள் குறைத்துள்ளன. புதுவை அரசும் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும்.
காவலர் பணிக்கான வயது வரம்பை 24-ஆக தளர்த்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொறியியல் படித்த பட்டதாரிகள்கூட காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
எனவே, ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து வயது உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர், பிரதமரை சந்திக்க முதல்வர் நாராயணசாமி விரும்பினால் அதற்கு ஏற்பாடு செய்ய பாஜக தயாராக உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது எவ்விதமான குற்றச்சாட்டையும் கூற முடியாத காங்கிரஸார், வேண்டும் என்றே
ரஃபேல் விமான பேர ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தவறான பரப்புரை செய்து வருகின்றனர்.
இது உண்மை என்றால் காங்கிரஸ் வழக்கு தொடர வேண்டியது தானே.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதுவையைச் சேர்ந்த வீராங்கனை ஆசிகா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆனால், அவரை கெüரவிக்க மாநில அரசு தவறிவிட்டது. இறந்த தலைவர்களின் சிலைகளை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.40 லட்சம் அரசு செலவு செய்கிறது.
ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு தயங்குகிறது என்றார் சாமிநாதன்.