தேர்தலில் வாக்களிக்கவும், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைக்காகவும் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த பொதுமக்கள் தொடர் விடுமுறை முடிந்து அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பியதால் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரி பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தமிழகம், புதுவையில் கடந்த 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்காக பொதுவிடுமுறை விடப்பட்டது. 19-ஆம் தேதி புனிதவெள்ளியையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அடுத்தாக சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம், புதுவையைச் சேர்ந்த பலர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். விடுமுறை நாள்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்தது.
இதையடுத்து, அவரவர் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினர். இதனால், ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரி பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.