சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது.
7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக வழங்கக் கோரி, அரசு சொசைட்டி கல்லூரிகளைச் சேர்ந்த 4,500 ஆசிரியர்கள், ஊழியர்கள் கடந்த ஓராண்டாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
கடந்த 20-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த 24 -ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.சிவா முன்னிலையில், அரசுக் கொறடா அனந்தராமன் வேண்டுகோளுக்கிணங்க, சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் வே.நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடனடியாக 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி, அரசாணை வெளியிடப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்து, போராட்டத்தை முடித்து வைத்தார்.
அதன்படி, கடந்த 28 -ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசின் நிதிநிலை அறிக்கையில், அரசு சொசைட்டி கல்லூரிகளுக்கான 7 - ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய விகிதம் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை 29 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடை
பெற்றது.
கூட்டத்துக்கு அந்தக் கூட்டமைப்பின் தலைவர் டி.ராம்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் என்.மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றி அரசாணை வெளியிட்ட முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர், வளர்ச்சி ஆணையர், உயர்கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.