முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
புதுச்சேரியை அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியை அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவை மாநிலம், திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட வம்புப்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் கணபதி, முருகன், ஐயனாரப்பன், பொறையாத்தம்மன் ஆகியோரது சன்னதிகள் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேக திருவிழா, கடந்த 22- ஆம் தேதி காலை கணபதி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சனிக்கிழமை காலை யாக வேள்விகள், 108 வகையான மூலிகைப் பொருள்களால் ஹோமம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை நாடி சந்தனம், மூலமந்திர ஹோமம், கரகம் புறப்படுதல் நடைபெற்றது. இதையடுத்து அர்ச்சகர்களின் கரக ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து, ஐயனாரப்பன், பொறையாத்தம்மன் கோயில்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து, முத்துமாரியம்மன் கோயில் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் வம்புப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.