புதுவை அரசின் ரூ. 150 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஜன. 22-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து அரசின் நிதித் துறைச் செயலர் கந்தவேலு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசின் ரூ. 150 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது. இந்தப் பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கும், அதன் பின்னர் ரூ. 10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் ஜன. 22-ஆம் தேதி இந்த ஏலத்தை நடத்துகிறது.
எனவே ஆர்வமுள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள் முதலியன ஓர் கூட்டுப் போட்டியில்லா ஏலத்தை மின்னணு முறையில் முடிவு செய்து, இந்திய ரிசர்வ் வங்கியின் உள்பிரிவு வங்கியில் தீர்வு மூலம் மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதள முகவரியில் ஜன. 22-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏலத்தின் முடிவுகள் வரும் ஜன. 22-ஆம் தேதி அதே இணையதள முகவரியில் வெளியிடும். ஏலம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணைய பத்திரங்களுக்கான தொகையை இந்திய ரிசர்வ் வங்கி மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளர் காசோலை, கேட்பு வரைவோலையை ஜன. 23-ஆம் தேதி வங்கிப் பணி நேரம் முடிவதற்குள் செலுத்த வேண்டும்.
இந்தப் பிணைய பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக் கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை (ஜூலை 23, ஜன. 23) வழங்கப்படும். பிணைய பத்திரங்கள் மாற்றி வழங்கக்கூடிய தகுதியுடையது என அந்தச் செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.