புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை டிஜிபி சுந்தரி நந்தாவுக்கு அந்த அமைப்பின் தலைவர் பி. ரகுபதி அனுப்பியுள்ள மனு விவரம்: புதுச்சேரியின் நேரு வீதி, அண்ணா சாலை, புஸ்ஸி வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி ஆகிய முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. இதனைத் தவிர்க்க, மேற்கண்ட வீதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாகனங்கள் சென்று வர மட்டும் அனுமதித்துவிட்டு, வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்ய வேண்டும்.
மறைமலை அடிகள் சாலை வழியாக அண்ணா சாலைக்கு வரும் வாகனங்களை புதுச்சேரி நகராட்சி அண்ணா திடலிலும், நேரு வீதி - அம்பலத்தடையார் மடம் வீதிக்கு வரும் வாகனங்களை பழைய சிறைச்சாலை வளாகம், செஞ்சி சாலை வாய்க்கால் மீதும் நிறுத்தும்படி செய்ய வேண்டும். இந்த வீதிகளில் போதிய வாகன நிறுத்த இட வசதியின்றி கட்டப்படும் வணிக நிறுவனங்களுக்கு நகரக் குழுமம் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் அனுமதி அளிக்கக் கூடாது. நகரின் முக்கிய வீதிகளை ஒரு வழிப்பாதையாகவும், வீதிகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை ஒரு பக்கமாக நிறுத்தும்படியும் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.