ராணுவத்தை விமர்சிக்கும் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பாலாக்கோட்டில் இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது என்றும், பாஜக அரசில்தான் நாடு பாதுகாப்பாக உள்ளது என்றும், நாடு என்றும் பாதுகாப்பாக இருக்க பாஜகவை மக்கள் ஆதாரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போதும் பலமுறை எல்லை தாண்டி துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், ஆனால் அதை காங்கிரஸ் கூட்டணி அரசு விளம்பரம் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தவறான தகவல்களைப் பரப்புகிறது என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பதிலளித்து வருகின்றனர். இதுகுறித்து புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தனது சுட்டுரை பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல்களை மறைக்கும் வகையில், தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். ராணுவத்தின் நடவடிக்கையை விமர்சனம் செய்யும் மோடி, மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.