புதுச்சேரியில் உள்ள ஹர்கோபிந்த் குரானா மாணவர்கள் அறிவியல் மையத்தில் கைவினைப் பொருள்களைக் கையாளும் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் சார்பில் விப்னெட் மன்றங்கள் அகில இந்திய அளவில் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பதிவு பெற்று புதுவையில் ஹர்கோபிந்த் குரானா மாணவர்கள் அறிவியல் மையம் தொடங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்துக்கு அறிவியல் ஆய்வுப் பொருள்களை விப்னெட் மன்றம் வழங்கியுள்ளது.
இதில், நில நடுக்க மாதிரி விளக்கச் செயல்பாடு தொடர்பான பொருள்கள், வானிலை ஆய்வு செய்யும் கருவிகள், பருவ நிலை ஆய்வுத் தகவல் அட்டைகள், அறிவியல் அறிஞர்களின் புத்தகங்கள், அண்டம் தொடர்பான கதை புத்தகங்கள், கணித வல்லுநர்களின் தொகுப்பு உள்பட பல பொருள்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பொருள்களை ஹர்கோபிந்த் குரானா மாணவர்கள் அறிவியல் மையத் தலைவர் முனைவர் அருண் நாகலிங்கம், பொறுப்பாளர்கள் அரவிந், விக்னேஷ், யோகானந்தன்ம் லக்ஷ்மண்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அரியாங்குப்பத்தில் ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்ற மாணவர்களுக்கு அறிவியல் கைவினைப் பொருள்களைப் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சி விடுமுறை தினங்களில் தொடர்ந்து நடைபெறும்.