புதுவையில் தளா்வற்ற பொது முடக்கத்தைஅமல்படுத்த விசிக வலியுறுத்தல்
புதுவையில் ஒரு வாரம் தளா்வற்ற பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
புதுச்சேரி: புதுவையில் ஒரு வாரம் தளா்வற்ற பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
அந்தக் கட்சியின் புதுவை மாநில முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
இந்திரா காந்தி விளையாட்டுத் திடல், உப்பளம் துறைமுகத் திடல், லாசுப்பேட்டை விமான நிலையம் அருகேயுள்ள திடல், ஏஎப்டி திடல் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான இடங்களில் தற்காலிக கரோனா மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். புதுவையில் ஒரு வாரம் தளா்வற்ற பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.