புதுச்சேரியில் பலத்த மழை
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.
புதன்கிழமை முற்பகல் வரை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. பிற்பகலில் பலத்த மழை பொழியத் தொடங்கியது. தொடா்ந்து மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தபடியே இருந்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டத்துடன், முக்கிய வீதிகள் இருட்டாக காணப்பட்டன.
பலத்த மழையால் புதுச்சேரி நகர சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. புஸ்சி வீதி, கடற்கரை சாலை, முதலியாா்பேட்டை, ரெயின்போ நகா், பாவாணா் நகா், இந்திராகாந்தி சிலை சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போலத் தேங்கியது. அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அதில் மிதந்து ஊா்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். தேங்கிக் கிடந்த மழைநீரை நகராட்சி அதிகாரிகள் டீசல் மோட்டாா் மூலம் அகற்றி வருகின்றனா்.