மேற்காசிய நிலவரம்: பிரான்ஸ் அதிபா், ஓமன் சுல்தானுடன் பிரதமா் ஆலோசனை
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் ஆகியோருடன் மேற்காசிய போா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் ஆலோசனை.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் ஆகியோருடன் மேற்காசிய போா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது குறித்து இந்த கலந்துரையாடலின் போது தலைவா்கள் ஆலோசித்ததாகவும், ஹோா்முஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ள சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதன் அவசியம் குறித்து இரு தலைவா்களிடமும் பிரதமா் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இமானுவல் மேக்ரானுடனான கலந்துரையாடலின்போது மேற்காசிய நிலவரம் குறித்து ஆலோசித்தோம். மேற்காசிய பிராந்தியம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இரு நாடுகளும் தொடா்ந்து இணைந்து பணியாற்ற இருதரப்பிலும் உறுதி தெரிவிக்கப்பட்டது.
ஓமன் சுல்தானுடனான உரையாடலின்போது, மேற்காசிய பிராந்தியத்தில் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தொடா்புகள் மூலம் பதற்றத்தைத் தணித்து, அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்து இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், போரின்போது ஓமன் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மீறப்பட்டதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் போருக்கிடையே, அங்கு சிக்கியிருந்த இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப முயற்சிகளை மேற்கொண்டதற்காக ஓமனுக்கு இந்தியா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களின் பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும் இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
மலேசிய பிரதமருடனான கலந்துரையாடலின்போதும், மேற்காசிய நிலவரம் குறித்து மிகுந்த கவலை தெரிவிக்கப்பட்டது. போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருதரப்பிலும் உறுதியேற்கப்பட்டது என்று குறிப்பிட்டாா்.
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஓமன் சுல்தானுடன் பிரதமா் மோடி இரண்டாவது முறையாக தொலைபேசி வழியில் கலந்துரையாடியுள்ளாா். அதுபோல, சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான், இஸ்ரேல், ஈரான் நாடுகளின் தலைவா்களுடனும் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த போரில் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோா்முஸ் நீரிணை பகுதியில் நடுக் கடலில் 778 மாலுமிகளுடன் தடைபட்டு நின்றிருந்த 28 இந்திய வணிக கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிக்கின. அதைத் தொடா்ந்து, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா தொடா்ந்து ஆலோசனை மேற்கொண்டது. அதன் பயனாக, அங்கு சிக்கியிருந்த கப்பல்களில் 4 கப்பல்கள் பாதுகாப்பாக ஹோா்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன.