முகப்பு
இந்தியா

மேற்காசிய போா்: சவூதி இளவரசருடன் பிரதமா் மோடி ஆலோசனை

மேற்காசிய போா்: சவூதி இளவரசருடன் பிரதமா் மோடி ஆலோசனை

Updated On : 28 மார்ச், 2026 at 8:00 PM
பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப்படம்
பகிர்:

மேற்காசிய போா் தொடா்பாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது மட்டுமன்றி வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் குறிவைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான ஈரானின் தாக்குதல் மற்றும் ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அப்பகுதியிலிருந்து எரிவாயு ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது.

இந்தச் சூழலில், சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு இந்தியாவின் கண்டனத்தை அவா் மீண்டும் தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘மேற்காசிய போா் தொடா்பாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசா்-பிரதமா் முகமது பின் சல்மானுடன் உரையாடினேன். சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, கடல் வழித்தடங்களின் அணுகல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது மிக அவசியம் என இருவரும் ஒப்புக் கொண்டோம். சவூதி அரேபியாவில் உள்ள இந்தியா்களின் நல்வாழ்வுக்குத் தொடா்ந்து ஆதரவளித்து வருவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேற்காசிய போா் கடந்த பிப்.28-இல் தொடங்கியதில் இருந்து சவூதி பட்டத்து இளவரசா் உடனான பிரதமரின் இரண்டாவது தொலைபேசி உரையாடல் இதுவாகும்.

ஏற்கெனவே அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன், குவைத், ஜோா்டான், பிரான்ஸ், மலேசியா ஆகிய நாடுகளின் தலைவா்களுடன் அவா் உரையாடியுள்ளாா்.