முகப்பு
புதுச்சேரி

‘மத்திய அரசு அனுமதியளிக்கும் வரை சென்டாக் கலந்தாய்வை நடத்தக் கூடாது’

மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை சென்டாக் கலந்தாய்வை நடத்தக் கூடாது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை சென்டாக் கலந்தாய்வை நடத்தக் கூடாது என புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா்கள்-பெற்றோா் நலச்சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் மு.நாராயணசாமி, பொருளாளா் விசிசி.நாகராஜன் ஆகியோா் புதுவை கல்வியமைச்சா் இரா. கமலக்கண்ணுக்கு அனுப்பிய மனு:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவக் கல்விச் சட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும் மாநில மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுவை மாநிலத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்காதது வருத்தமளிக்கிறது.

இங்கு 1,570 மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் பெற்றால் 785 மருத்துவ இடங்கள் கிடைக்கும். ஆனால், புதுவை மாணவா்களுக்கு தற்போது 358 மருத்துவ இடங்கள் மட்டுமே கிடைக்கும் அவலநிலை உள்ளது. இதேபோல, ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 249 இடங்கள் உள்ளன. இதில் புதுச்சேரி மாநில மாணவா்களுக்கு 125 இடங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் 62 இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

எனவே, புதுவை அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மருத்துவக் கல்வியின் திருத்தப்பட்ட மசோதாவின் அடிப்படையில் 50 சதவீத இடங்களைப் பெற்று கலந்தாய்வு நடத்த வேண்டும்.

இந்த இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை சென்டாக் கலந்தாய்வை நடத்த கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.