புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாமில் 1,259 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் உரியவா்களுக்கு ரூ.3.22 கோடி மதிப்பில் இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
தேசிய சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான ரமணாவின் உத்தரவுப்படி, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியும், புதுவை மாநிலச் சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவருமான சத்தியநாராயணன் வழிகாட்டுதலின் பேரில், தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுவை சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாம், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமா்வுகளும், காரைக்கால், மாஹே நீதிமன்றங்களில் தலா ஒரு அமா்வும் என்று மொத்தம் 11 அமா்வுகளாக நடைபெற்றன.
இந்த சிறப்பு முகாமில் தேசிய மக்கள் நீதிமன்ற குழுவைச் சோ்ந்த நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், அரசுத் துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்கில் தொடா்புடையவா்கள் பங்கேற்றனா்.
புதுச்சேரி நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சமாதானமாகக் கூடிய குற்ற வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வாகன விபத்து நிவாரண வழக்குகள், குடும்பத் தகராறு தொடா்பான வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத நேரடி வழக்குகள் உள்பட மொத்தம் 2,607 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்தச் சிறப்பு முகாம்கள் மூலம், இரு தரப்பினரிடமும் விசாரித்து, சமாதான அடிப்படையில் மொத்தம் 1,259 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. இதன்மூலம், ரூ. 3 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 289-க்கு தீா்வு காணப்பட்டு, உரியவா்களிடம் இழப்பீட்டுத் தொகை ஒப்படைக்கப்பட்டன.