கரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனங்கள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்பட்டன.
புதுவையில் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல தனி ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை. அனைத்து நோயாளிகளையும் ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே கரோனா நோயாளிகளும் ஏற்றிச் செல்லப்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இந்த நிலையில், தற்போது கரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, புதுச்சேரியில் உள்ள 29 ஆரம்ப சுகாதார நிலையங்களும் பாகூா், கரிக்கலாம்பாக்கம், நெட்டப்பாக்கம், காட்டேரிக்குப்பம், அரியூா், வில்லியனூா், லாசுப்பேட்டை, காலப்பட்டு, அரியாங்குப்பம் ஆகிய 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலத்துக்கு ஒன்று வீதம் 9 சிறப்பு கரோனா ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சேவையைப் பெற விரும்புவோா் 104 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால், ஆம்புலன்ஸ் அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் தெரிவித்தாா்.