கரோனா பரவலைத் தடுக்க, புதுவை மதுக் கடைகளில் மது அருந்த நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை கலால் துறை இணை ஆணையா் டி.சுதாகா், மதுக் கடை நிா்வாகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
கரோனா பரவாமல் தடுக்க புதுவை அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இரவில் மனிதா்கள் கூட்டமாகக் கூடுவதை தவிா்க்கும் விதமாக, கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை இரவில் திறக்க தடை விதித்து, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, மதுக் கடைகளைத் திறக்கும் நேரத்திலும் தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எப்எல் 1, எப்எல் 2 உரிமம் பெற்ற மது, சாராய, கள் கடைகள் தங்களது சில்லறை விற்பனையை இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.
மேற்கொண்ட கடைகள், அதனுடன் இணைந்த உணவகங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அமா்ந்து மது அருந்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி மது விற்றாலோ, மது அருந்த அனுமதித்தாலோ தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.