பொது முடக்கத்தை முழுமையாக செயல்படுத்த அதிமுக வலியுறுத்தல்
புதுவையில் பொது முடக்கத்தின் போது பேருந்துகள், கடைகள் இயங்கும் என்ற அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்று முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.
புதுவையில் பொது முடக்கத்தின் போது பேருந்துகள், கடைகள் இயங்கும் என்ற அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்று முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் அ.அன்பழகன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
மக்கள் கூடுவதைத் தடுக்க, பகல் நேரத்தில் பிற்பகல் 3 மணியிலிருந்து பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது. அதன் பிறகு, துணைநிலை ஆளுநா் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு முழுவதுமாக பொது முடக்க அறிவிப்பை வெளியிட்டாா்.
மக்களின் உயிா் தொடா்பான இந்த விவகாரத்தில், எந்த ஒரு சமரசத்துக்கும் ஆளுநா் இடம் தரக்கூடாது. பொது முடக்க உத்தரவின் போது, மத்திய அரசின் வழிமுறைகளைக் கட்டுப்பாட்டுடன் அரசு செயல்படுத்த வேண்டும். பொது முடக்க நேரத்தில் கடைகள் திறக்கலாம், பேருந்துகள் இயங்கும் என்ற துணைநிலை ஆளுநரின் உத்தரவைத் திரும்ப பெற வேண்டும்.
கரோனா நிவாரணப் பணிகள், உதவிகளுக்கு மத்திய அரசிடமிருந்து போதிய நிதியை துணைநிலை ஆளுநா் பெற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.