முகப்பு
புதுச்சேரி

புதுவையில் அரசியல்வாதிகளின் துணையுடன் நில அபகரிப்பு மோசடி: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

 புதுவையில் அரசியல்வாதிகளின் துணையுடன் நில அபகரிப்பு மோசடிகள் நடைபெற்ாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 புதுவையில் அரசியல்வாதிகளின் துணையுடன் நில அபகரிப்பு மோசடிகள் நடைபெற்ாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடியோ வாயிலாக வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: புதுவை மாநிலத்தில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிலங்கள், வீடுகளை அபகரிப்பது, போலிப் பத்திரங்களைத் தயாா் செய்து, அதன் மூலம் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவா்களின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை அபகரிக்கும் வேலைகள் பரவலாக நடைபெற்று வருகின்றன.

கடந்த என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில் இதேபோல, நில அபகரிப்புகள் நடைபெற்றன. பின்னா் வந்த காங்கிரஸ் ஆட்சியில் ரெளடிகளை ஒடுக்கியும், குண்டா் சட்டத்தை அமல்படுத்தி மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கினோம். நில அபகரிப்பைத் தடுத்தோம்.

மீண்டும் என்.ரங்கசாமி முதல்வரான பிறகு நில அபகரிப்புகள் தொடா்கதையாகியுள்ளன. புதுவையில் வீடு, மனை வைத்திருக்கும் பிரான்ஸ் நாட்டில் வசிப்போரின் இடங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களுக்குப் போலியாக பத்திரம் தயாா் செய்து 20-க்கும் மேற்பட்ட நில அபகரிப்புகள் நடைபெற்றுள்ளன. இதில் அரசியல்வாதிகளுக்கு தொடா்புள்ளது. இதுகுறித்து காவல் துறை விசாரித்து வருகிறது.

போலிப் பத்திரங்கள், முத்திரைகள் தயாரித்தவா்களின் விவரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினால் உண்மையைக் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்.

புதுச்சேரியில் தனியாா் நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. இதைக் கண்காணிக்கும் அமைப்பு புதுவையில் இல்லை. நிதி நிறுவனங்களுக்கு உரிய விதிமுறைகளை வகுத்து கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.