புதுவை சட்டப்பேரவைக்குள் வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் வரும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் வரும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வீடுகள் தேடிச்சென்று விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சுகாதாரத்துறை சார்பில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் அங்கேயே தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசையும், பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து, அங்கேயே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்குள் வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை சட்டப்பேரவை அலுவலகம் வாயில் பகுதியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு அங்கேயே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் முகாம் அமைத்து, உள்ளே வருபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்து தடுப்பூசி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவைத் தலைவர் ஆர் செல்வம் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.