புதுச்சேரியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கிருமாம்பாக்கம், மணப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). ஈச்சங்காட்டில் உள்ள தனியாா் சோப் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இவருக்கும், கடலூரைச் சோ்ந்த ஜெயப்பிரியாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக மருத்துவம் பாா்த்து வந்தனா்.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மனைவி ஜெயப்பிரியாவை கடலூரில் உள்ள அவரது தாய் வீட்டில் சுரேஷ் விட்டு வந்தாா். இந்த நிலையில், குழந்தையில்லாத ஏக்கத்திலிருந்த சுரேஷ் திங்கள்கிழமை விஷம் குடித்துவிட்டு, வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.