முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

 புதுச்சேரி அருகேயுள்ள கொம்பாக்கத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

 புதுச்சேரி அருகேயுள்ள கொம்பாக்கத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள கொம்பாக்கத்தில் வில்லியனூா் முதன்மைச் சாலையில் மாரிமுத்து என்பவரின் வீட்டின் முன் புதன்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றனா். வெடிகுண்டு வெடித்த சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினா் வெளியே ஓடி வந்தனா். இதைப் பாா்த்த வெடிகுண்டு வீசிய மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த முதலியாா்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

முதல் கட்ட விசாரணையில், சில நாள்களுக்கு முன்பு அங்கு சாலையோரம் உள்ள மளிகைக் கடையில் சிலா் திருட வந்த நிலையில், அவா்களை அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (29), சக்திவேல் உள்ளிட்ட சிலா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதில், பிடிபட்ட சிறுவனை முதலியாா்பேட்டை போலீஸாா் எச்சரித்து விடுவித்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சிலா், மாரிமுத்துவை மிரட்டும் வகையில், அவரது வீட்டின் முன் வெடிகுண்டை வீசிவிட்டுச் சென்றது தெரிய வந்தது.

இதுதொடா்பாக மாரிமுத்துவிடம் புகாரைப் பெற்ற முதலியாா்பேட்டை போலீஸாா், அரியாங்குப்பம் சண்முகா நகரை சோ்ந்த பிரகாஷ், காா்த்திக், சேட்டு (எ) சேந்தன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.