175 இடங்களில் உதயசூரியன் போட்டி! 234 தொகுதிகளிலும், ஸ்டாலின்தான் நிற்கிறேன்!
திமுக தொண்டர்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்.
உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
பத்தாண்டுகால படுமோசமான அ.தி.மு.க. ஆட்சியினால் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்திக் காட்டியிருக்கிறோம். இந்தப் பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழித் தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அதனை மதித்து உணர்ந்தே இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்றன.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களிடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனிடமும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிடமும் மற்ற இயக்கத் தலைவர்களிடமும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்களை உங்களில் ஒருவனான நான் நேரில் விளக்கினேன். அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னேன்.
எப்போதும் என் மீது அன்பும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட நமது தோழமை இயக்கத் தலைவர்களும், தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன்.
திமுக கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மனப்பூர்வமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும்.
மதச்சார்பின்மை - மாநில உரிமை – சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணிதான் நம்முடையது. அதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கிறார்கள். திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுகவின் நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. அதுவும் இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா. மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணிநேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது.
அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் தலைமை நிர்வாகிகள் முன் தங்களுக்கான நேர்காணல் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்ததில் விருப்பமனு செய்திருந்த ஒவ்வொரு தொகுதி உடன்பிறப்புகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம், “உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்று திமுக தலைவர் என்ற முறையில் தெரிவித்தேன். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள்தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.
உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்!