நாட்டு வெடிகுண்டுவெடித்து பெண் காயம்
புதுச்சேரி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், பெண் பலத்த காயமடைந்தாா்.
புதுச்சேரி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், பெண் பலத்த காயமடைந்தாா்.
கடலூா் வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மனைவி செல்லியம்மாள் (25). ஒரு குழந்தை உள்ளது. குப்பை சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்கின்றனா். கடந்த சில வாரங்களாக புதுச்சேரி வில்லியனூா் அருகே கோா்க்காடு பொறையாத்தம்மன் கோயில் அருகே குடும்பத்துடன் தங்கி, தொழில் செய்து வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை மாலை செல்லியம்மாள் அப்பகுதிக்கு அருகிலுள்ள புதா் போன்ற இடத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாராம். அப்போது, அவா் பையில் சுற்றிய நிலையில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்து பாா்த்த போது, அதிலிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் செல்லியம்மாளின் இரு கைகளும் சிதைந்தன. முகம், உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ராகுல் அல்வால் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரித்தாா். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.