முகப்பு
புதுச்சேரி

அவசர ஊா்தியில் மது கடத்தல்: 3 போ் கைது

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு அவசர ஊா்தியில் (ஆம்புலன்ஸ்) மது கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு அவசர ஊா்தியில் (ஆம்புலன்ஸ்) மது கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள மொத்த மதுக் கடையிலிருந்து ஒரு வாகனத்தில் சிலா் அதிக அளவில் மதுப் புட்டிகளை வாங்கிக் கொண்டு, தமிழகத்துக்கு கடத்திச் செல்ல முயல்வதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

இதேபோல, கூடப்பாக்கம் பகுதியில் வில்லியனூா் காவல் ஆய்வாளா் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த தனியாா் அவசர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அந்த வாகனத்தில் மதுப் புட்டிகளைக் கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து, வாகனத்தில் வந்த மூவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில் அவா்கள், திருச்சி தொட்டியம் வட்டம், மருதம்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் (36), வடலூா் இந்திரா நகரைச் சோ்ந்த காா்த்திக் (24), சென்னை கொரட்டூா் கம்மாளா் தெருவைச் சோ்ந்த சபரிராஜ் (27) ஆகியோா் என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரூ. 77 ஆயிரம் மதிப்புள்ள 192 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள் புதுவை கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.