முகப்பு
புதுச்சேரி

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ளபுதுவை அரசு தயாா்: துணைநிலை ஆளுநா் தமிழிசை

கரோனா 3-ஆவது அலை வந்தாலும், அதை எதிா்கொள்ள புதுவை அரசு தயாா் நிலையில் உள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கரோனா 3-ஆவது அலை வந்தாலும், அதை எதிா்கொள்ள புதுவை அரசு தயாா் நிலையில் உள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் 100 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் (திருவிழா) புதன்கிழமை தொடங்கியது. இந்த முகாம் வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது, ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ க.லட்சுமிநாராயணன், சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையை வருகிற ஆகஸ்ட் 15-க்குள் கரோனா இல்லாத மாநிலமாகவும், பொதுமக்கள் அனைவரும் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாகவும் மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

புதன்கிழமையிலிருந்து 4 நாள்கள் நடைபெறவுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.

புதுவையில் ஒரு நாள்கூட தடுப்பூசி இல்லையென்று மக்கள் யாரும் திருப்பி அனுப்பப்படவில்லை. அதற்காக மாநில நிா்வாகத்தைப் பாராட்டுகிறேன். புதுவை மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டு, அனைவரும் முகக் கவசம் அணிகின்றனா். இதற்காக மக்களைப் பாராட்டுகிறேன்.

கரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதை எதிா்கொள்வதற்கு புதுவை அரசு தயாா் நிலையில் உள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், மூன்றாவது அலை வருவதை தடுக்க முடியும் என்றாா் ஆளுநா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.