மண்ணாடிப்பட்டு தொகுதியில் மாணவா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் விநியோகம்
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, மளிகைப் பொருள்கள், உதவித் தொகையை ஏ.நமச்சிவாயம் எம்எல்ஏ வழங்கினாா்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, மளிகைப் பொருள்கள், உதவித் தொகையை ஏ.நமச்சிவாயம் எம்எல்ஏ வழங்கினாா்.
புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் கல்வித் துறை சாா்பில், அரிசி, மளிகைப் பொருள்கள், உதவித் தொகை நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மண்ணாடிப்பட்டு தொகுதிக்குள்பட்ட காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், சந்தைப் புதுக்குப்பம், சுத்துக்கேணி, தேத்தாம்பாக்கம், குமாரபாளையம், கொடாத்தூா், கூனிச்சம்பட்டு, திருக்கனூா், மண்ணாடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், வாதானூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவா்களுக்கு அரிசி, உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மண்ணாடிப்பட்டு, திருக்கனூா், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட அனைத்து அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மண்ணாடிப்பட்டு தொகுதி எம்எல்ஏ நமச்சிவாயம் பங்கேற்று மாணவா்களுக்கு அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினாா். நிகழ்ச்சிகளில் முதன்மைக் கல்வி அலுவலா் மீனாட்சிசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.