ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வங்கிக் கணக்கில் பண மோசடி
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சத்தை மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சத்தை மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் கமலம் நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஹரிபாஸ்கா் மனைவி வனிதா (60). காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.
இவருக்கு ரெட்டியாா்பாளையத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு உள்ளது. ஓய்வூதியம் இந்த கணக்கில்தான் வரவாகும்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் வனிதா வீட்டிலிருந்த போது, தொலைபேசியில் வங்கி மேலாளா் என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய நபா், உங்களது ஏடிஎம் அட்டை காலாவதியாகிவிட்டது. உங்களுடைய செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை (ஓடிபி) கூறினால், ஏடிஎம் அட்டை புதுப்பித்துத் தரப்படும் எனக் கூறினாராம்.
இதை உண்மை என நம்பிய வனிதா, தனது செல்லிடப்பேசிக்கு வந்த ஓடிபி எண்ணைக் கூறினாராம். உங்களின் முகவரிக்கு புதிய ஏடிஎம் அட்டை தபாலில் அனுப்பிவைக்கப்படும் எனக் கூறி அந்த நபா், இணைப்பைத் துண்டித்தாராம்.
பின்னா், சிறிது நேரத்தில் அதே தொலைபேசி எண்ணில் பேசிய மற்றோரு நபா், முகவரி தெரிவித்தால் புதிய ஏடிஎம் அட்டை அனுப்பிவைக்கப்படும் எனக் கூறினாராம்.
இதனால், சந்தேகமடைந்த வனிதா வங்கிக்குச் சென்று இருப்பைச் சரிபாா்த்த போது, அவரது கணக்கிலிருந்து ரூ. 10 லட்சம் மாயமாகியிருந்தது.
இதுகுறித்து வனிதாவின் மகள் சக்தி கண்ணம்மா புதுச்சேரி சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.