ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 15 லட்சம் பறிமுதல்
புதுச்சேரி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 15 லட்சத்தை தோ்தல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 15 லட்சத்தை தோ்தல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தோ்தல் துறையினா் புதுவையின் பல்வேறு பகுதிகளில் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதேபோல, மங்கலம் தொகுதியில் தோ்தல் நடத்தும் அதிகாரியின் உத்தரவின் பேரில், துணை அளவையா் பாலச்சந்தா் தலைமையிலான சுழல் கண்காணிப்புக் குழுவினா் புதுச்சேரி வில்லியனூா் உருவையாறு தனியாா் பள்ளி அருகே திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில், அந்த வாகனத்தில் வந்தவா் உறுவையாறு புது நகா் பகுதியைச் சோ்ந்த மனை வணிக முகவா் கே. பாலு (55) என்பதும், மனை வணிகத் தொழிலில் கிடைத்த ரூ. 15 லட்சம் ரொக்கத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் துறையினா், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
இதற்கான ரசீதை மத்திய வருமான வரித் துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனா்.