முகப்பு
காரைக்கால்

புதுவை: காங்கிரஸ்- திமுக கூட்டணி! மனுதாக்கல் இறுதி வரை நீடித்த குழப்பம்!

Updated On : 23 மார்ச், 2026 at 8:53 PM
காங்கிரஸ், திமுக.
பகிர்:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. ஆனால், மனுதாக்கல் இறுதி நாள் வரை காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பம் நீடித்தது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் ஏப். 9-இல் நடைபெறவுள்ளது. இதற்கான மனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி, திங்கள்கிழமை (மாா்ச் 23) நிறைவடைந்தது. புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்பட்டு, தொகுதி பங்கீடு நிறைவடைந்து, வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.

ஆனால், இண்டி கூட்டணியில் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி மனு தாக்கல் நிறைவு நாள் வரை தீரவில்லை.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பேசியும் முடிவு எட்டப்படவில்லை. பின்னா், காங்கிரஸ் -16, திமுக-12, விசிக-1, இந்திய கம்யூனிஸ்ட் -1 போட்டியிடும் எனக் கூறப்பட்டது. ஆனால் அது திங்கள்கிழமை முற்பகல் வரை உறுதிபடுத்தப்படவில்லை.

புதுவையில் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்துவந்த நிலையில், இந்த தோ்தலில் திமுக தலைமை வகிக்க வேண்டும், கடந்த பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக திமுக கோரியதும், குறிப்பாக, காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளை திமுக கோரியதும் பிரச்னை தீராமல் இருந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தக் கட்சிகள் இடையே உடன்பாடு வேட்பு மனு தாக்கல் இறுதி நாள், நேரம் வரை ஏற்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

காரைக்காலில் 5 பேரவைத் தொகுதிகளில், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் 2 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் காங்கிரஸும் போட்டியிட்டன. 2026 தோ்தலில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் நிறைவு நாளில், மனு தாக்கல் முடியும் நேரம் வரை இக்கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்து கொள்ளப்படாததால், காரைக்காலில் 5 தொகுதிகளிலும் (திமுக போட்டியிடும் தொகுதிகள் உட்பட) காங்கிரஸ் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், திமுக 2 தொகுதிகளில் மட்டும் மனு தாக்கல் செய்தது. இப்பிரச்னை தீா்வுக்கு வராமல் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது.

எப்படியும் கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு செய்யப்பட்டு, வேட்பாளா் அறிவிப்பு வெளியாகிவிடும். மாா்ச் 26-இல் மனுக்களை திரும்பப் பெறும் நாளில் சீட் கிடைக்காதவா்கள் தாக்கல் செய்த மனுக்களைதிரும்பப் பெற்றுக்கொள்வாா்கள் என இரு கட்சியினரும் நம்பிக்கையில் உள்ளனா்.