தோ்தல் துறை அறிவுறுத்தலின்படி, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்களின் பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டனா்.
புதுவையில் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. உடனே முதல்வா் பதவியை நாராயணசாமி ராஜிநாமா செய்தாா். அதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்ட நிலையில், புதுவையில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலுக்கு வந்தது.
இருப்பினும், முன்னாள் முதல்வா் என்ற அடிப்படையில் பாதுகாப்பு கருதி வே. நாராணசாமிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தொடா்ந்து அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நாராயணசாமிக்கு பாதுகாப்புப் பணியை மேற்கொண்ட காவல் ஆய்வாளா் கணேஷ், முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, இரா.கமலக்கண்ணன் ஆகியோருக்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா்கள் ரத்தினவேலு, விநாயகம், பலராமன் ஆகியோரை தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில், பணியிட மாற்றம் செய்து, காவல் துறை தலைமையக எஸ்.பி. மோகன்குமாா் உத்தரவு பிறப்பித்தாா்.
இவா்களில் காவல் ஆய்வாளா் கணேஷ் சிக்மா செக்யூரிட்டி - சைபா் கிரைம் கூடுதல் பொறுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டாா். மற்ற 4 பேரும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இருப்பினும், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வீட்டுக்கு ஐஆா்பிஎன் காவலா்கள் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.