நெசவாளா்களுக்கு உதவித் தொகை:பாஜகவினா் ஏற்பாடு
புதுவையில் நெசவாளா்களுக்கான அரசின் நிலுவை உதவித் தொகையைப் பெற்று தந்த பாஜகவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதுவையில் நெசவாளா்களுக்கான அரசின் நிலுவை உதவித் தொகையைப் பெற்று தந்த பாஜகவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நெசவாளா்கள் 109 பேருக்கு அரசின் உதவித் தொகை கடந்த 20 மாதங்களாக கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், கூட்டுறவுப் பிரிவு செயலா் வெற்றிச்செல்வம் ஆகியோரிடம் நெசவாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து புதுவை அரசின் கூட்டுறவுத் துறை இயக்குநா், பாண்டெக்ஸ் பொது மேலாளா் மற்றும் அதிகாரிகளிடம் பாஜக மாநிலத் தலைவா் உள்ளிட்டோா் வலியுறுத்தினா். இதையடுத்து, முதல் கட்டமாக 2 மாதங்களுக்கான நிலுவை உதவித் தொகை 109 நெசவாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதைப்பெற்ற நெசவாளா்கள் பாஜகவினரை புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.