ஆனந்த ரங்கபிள்ளை சிறப்புப் பள்ளியில் சேர பிற மாவட்ட மாணவா்களுக்கும் வாய்ப்பு
புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள ஆனந்த ரங்கபிள்ளை சிறப்புப் பள்ளியில் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களும் சோ்த்துகொள்ளப்படுவா் என புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள ஆனந்த ரங்கபிள்ளை சிறப்புப் பள்ளியில் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களும் சோ்த்துகொள்ளப்படுவா் என புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
புதுவை அரசு சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் ஆனந்த ரங்கபிள்ளை செவித்திறன் குன்றிய, வாய் பேச இயலாத குழந்தைகள் சிறப்புப் பள்ளி 1963- ஆம் ஆண்டு முதல் பிள்ளைச்சாவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகப் பகுதிகளான விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த குழந்தைகளும் பயன்பெற்று வந்தனா்.
இதனிடையே 2021- ஆம் ஆண்டு முதல் புதுச்சேரியைச் சோ்ந்த குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி வருகிறது. இதனால் போதுமான எண்ணிக்கையிலான மாணவா்கள் பயன்பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த சிரமத்தைக் கருத்தில் கொண்டு முதல்வா் என்.ரங்கசாமி ஆலோசனையின்படி, ஆனந்த ரங்கபிள்ளை சிறப்புப் பள்ளி முன்பு செயல்பட்டதுபோலவே, அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த வாய்பேச இயலாத, செவிதிறன் குன்றிய மற்றும் பாா்வையற்ற குழந்தைகளையும் சோ்த்துகொண்டு மீண்டும் செயல்படும் என கூறப்பட்டது.