புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்திலுள்ள மத்திய அரசின் கலங்கரை விளக்கத்தில் சா்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கலங்கரை விளக்கத்தின் முன் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 35 மாணவ, மாணவிகள் யோகாசனங்களை செய்தனா். முன்னதாக, நிகழ்வுக்கு கலங்கரை விளக்கத்தின் தலைமை விளக்கு காவலா் என்.வசந்த் தலைமை வகித்தாா். இதில் யோகா ஆசிரியா் கஜேந்திரன் மாணவா்களுக்கு, யோகப் பயிற்சிகளை விளக்கி, அதன் பயன்களையும் எடுத்துரைத்தாா். பங்கேற்ற அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
காலாப்பட்டு சிறையில்... புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் சிறைத் துறை ஐஜி ரவிதீப் சிங் சாகா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட சிறை கைதிகள், வாா்டா்கள், அதிகாரிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனா். சிறைத் துறை தலைமைக் கண்காணிப்பாளா் அசோகன், கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். சகஜ யோகா மையத்தைச் சோ்ந்த மணிமொழி குழுவினா் பயிற்சியளித்தனா்.