புதுச்சேரி கம்பன் விழா மே 13-இல் தொடக்கம்
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 55-ஆவது ஆண்டு விழா, நிகழாண்டு கம்பன் விழா வருகிற 13-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 55-ஆவது ஆண்டு விழா, நிகழாண்டு கம்பன் விழா வருகிற 13-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கம்பன் கழகத் தலைவா் வெ.பொ.சிவக்கொழுந்து, பொருளாளா் எஸ்.செல்வகணபதி ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் வருகிற 13-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கம்பன் விழா தொடங்குகிறது. தொடக்க விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறாா். புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்று பேசுகிறாா்.
புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கவுரை நிகழ்த்துகிறாா். மலேசியா மனித வளத் துறை அமைச்சா் டத்தோஸ்ரீ மு. சரவணன் சிறப்புரையாற்றுகிறாா்.
முற்பகல் 11.30 மணிக்கு தனியுரையும், மாலை 6.30 மணிக்கு கருத்தரங்கமும் நடைபெறும்.
14-ஆம் தேதி காலையில் நடைபெறும் இளையோா் அரங்குக்கு ராமலிங்கம் தலைமை வகிக்கிறாா். அன்று காலை 10.15 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும், 10.45 மணிக்கு வழக்காடு மன்றமும் நடைபெறும். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நடுவராக இருப்பாா். மாலை 5 மணிக்கு கவியரங்கம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தலைமை வகித்து சிறப்புரையாற்றுவாா். தொடந்து, ‘போற்றுவேன் கம்பனை புகழ்ந்து’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
மாலை 5 மணிக்கு தனியுரையும், படித்தவரும் மிகவும் நெகிழும் பாத்திரம் என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறும். அதற்கு ராமலிங்கம் நடுவராக இருப்பாா்.
15-ஆம் தேதி காலை சிந்தனை அரங்கம் நடைபெறும். மாலையில் நடைபெறும் தனியுரையில் தமிழருவி மணியன் பங்கேற்று பேசுகிறாா். விழா நிறைவாக அன்று மாலை 6 மணிக்கு மேல்முறையீடு நிகழ்ச்சி நடைபெறும். இதில் உச்சநீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் நடுவராக பங்கேற்று பேசுகிறாா் என்றனா் அவா்கள்.